Uncategorized
“தைரியம் இருந்தா நேர்ல வந்து பேசுங்க..!” எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி.சண்முகம் விடுத்த பகிரங்க சவால்… அலறும் அதிமுக வட்டாரம்..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெற்ற முக்கிய எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் தனி அணி உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே கட்சியின் தொடர் தோல்விக்குக் காரணம் என இவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், சில மாவட்டச் செயலாளர்களின் குறைபாடுகளே தோல்விக்குக் காரணம் என எடப்பாடி ஆதரவாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்தச் செல்வாக்கே காரணம் என்றால், கட்சி தோற்ற 187 தொகுதிகளில் அவரது செல்வாக்கு செல்லாக்காசாகி விட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சொந்த மாவட்டமான சேலையிலேயே கட்சியைக் ஜெயிக்க வைக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்கள் மீது பழியைப் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை என்று கூறிய நிலையிலும் எடப்பாடி பழனிசாமி அதைக் கேட்கவில்லை என்றும், தே.மு.தி.க.வை திட்டமிட்டு கூட்டணியிலிருந்து வெளியேற்றினார் என்றும் குற்றம்சாட்டினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர்கள் ராஜினாமா செய்யும் மரபு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி தங்களை அழைத்து நேரடியாகப் பேச வேண்டும் என்றும், ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தங்களைப் பற்றிப் பேசத் தகுதியில்லை என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
