Uncategorized
மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தது ஏன்…? BCCI-யின் நிலைப்பாடு என்ன..? பயிற்சியாளர் அமோல் முஜும்தார்…!!
துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷெபாலி வர்மா (68) மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் (59) அதிரடி ஆட்டத்தால் 183 ரன்கள் குவித்தது. 184 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு சுருண்டது.
இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு புதிய சர்ச்சை வெடித்தது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய மகளிர் அணி மறுத்து விழாவைப் புறக்கணித்தது. ஏசிசி துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதி மூலமாகவோ கோப்பையை வழங்கலாம் என்ற இந்திய அணியின் கோரிக்கைகளை நக்வி நிராகரித்து, தான் தான் வழங்குவேன் என்று பிடிவாதம் பிடித்ததால் இந்திய அணி கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெறாமல் வெளியேறியது.
இது குறித்து இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்கக் கூடாது என்பது பிசிசிஐ (BCCI) எடுத்த கொள்கை முடிவு என்றும், தாங்கள் வாரியத்தின் முடிவிற்குத் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மைதானத்தின் பெரிய திரையிலேயே ‘இந்தியா ஆசியக் கோப்பை 2026 என அறிவிக்கப்பட்டுவிட்டதால் எங்களைப் பொறுத்தவரை தொடர் முடிந்துவிட்டது என்றும், அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
