Uncategorized
“சொந்தக் காசுல போர்டு மாத்தி போட்டோ அனுப்பணுமா..?” ஆசிரியர்கள் தலையில் விழுந்த இடி.. தமிழக அரசை ‘டேக் டைவர்ஷன்’ என விளாசிய அன்பில் மகேஸ்..!
தமிழக தற்போதைய அரசு நடவடிக்கைகளை கண்டித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் தற்போதைய அரசு காட்டுவதில்லை. நிர்வாகத் திறனற்ற ஒரு ‘டேக் டைவர்ஷன்’ அரசு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று சாடியுள்ள அவர், ஆசிரியர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதையும், அவர்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்துள்ள அரசு, அதற்கான பெயர்ப் பலகையை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, சொந்தச் செலவில் பலகையை மாற்றுவதோடு நிறுத்தாமல், அதை மாற்றியதற்கான ஆதாரமாக அந்தப் பெயர்ப் பலகையோடு ஆசிரியர்கள் நின்று புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என வற்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அன்பில் மகேஸ், அரசின் இந்த நடவடிக்கைகளுக்குத் தனது கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.
