Uncategorized
“அப்பா கீழ வாப்பா… மனைவி சண்டையால் தண்ணீர் தொட்டியில் ஏறிய கணவன்… 4 மணி நேர போராட்டத்திற்கு பின் நேர்ந்த கொடூரம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், குடும்பத் தகராறு காரணமாகக் குடிபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறிய 30 வயது இளைஞர் ஒருவர், நிலைதடுமாறித் தொட்டிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஹாரன்பூரின் சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த சுபம் என்ற அந்த இளைஞர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தேஹாத் கோத்வாலி எல்லைக்குட்பட்ட காசிராம் காலனியில் வசித்து வந்த அவரது மனைவி சிவானிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சுபம் ஆத்திரத்தில் அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி கீழே வர மறுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேஹாத் கோத்வாலி காவல்துறையினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகச் சுபமிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினரின் மைக்கை வாங்கி, சுபமின் 5 வயது சிறுவன் “அப்பா கீழே வாருங்கள்…” என்று கதறி அழைத்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது. சுபம் இதற்கு முன்பும் இதுபோன்று பலமுறை தண்ணீர் தொட்டியில் ஏறியிருந்தாலும், அப்போது பொதுமக்கள் அவரைப் பத்திரமாக மீட்டிருந்தனர்.
இருப்பினும், இம்முறை மாலை வேளையில் திடீரென நிலைதடுமாறிய சுபம், தண்ணீர் தொட்டியின் உள்பகுதியில் விழுந்தார். காவல்துறையினரும் பொதுமக்களும் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளைஞரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
