Uncategorized
திடீரென அறுந்து விழுந்த கயிறு..! நடுவானில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சுற்றுலாப் பயணி… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!
கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா விடுதியில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது நேரிட்ட பயங்கர விபத்தில் விஜயாபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்ற வாலிபர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் நடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாதுகாப்பு பூட்டு உடைந்ததால், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தை அவரது சகோதரர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தக் கொடூரமான வீழ்ச்சியால் குபேரின் இரு கைகள் மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன; மேலும் நரம்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக மிராஜ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசார்ட் நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்றும், அவர்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குபேரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகக் கூறிய ரிசார்ட் நிர்வாகம், தற்போது தங்களது அழைப்புகளைப் புறக்கணிப்பதாகக் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், ரிசார்ட் மேலாளர் இந்த விபத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறியதோடு, தங்களது தரப்பில் அலட்சியம் ஏதுமில்லை என மறுத்துள்ளார்.
