Uncategorized
மதுரையின் அடையாளம் காலி!.. 5-வது உலகத் தமிழ் மாநாட்டு சின்னத்திற்கு வந்த சோதனை.. உயர்நிதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.. நள்ளிரவில் நடந்த பரபரப்பு நடவடிக்கை..!!
மதுரையில் 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய நான்கு முக்கிய நுழைவாயில் பகுதிகளில் பிரமாண்ட தோரண நுழைவாயில்கள் கட்டப்பட்டன. தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் உள்ள தோரண வாயில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இரண்டு நுழைவாயில்களையும் இடித்து அகற்ற உத்தரவிட்டதோடு, தேவைப்பட்டால் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் புதிய நுழைவாயில்களைக் கட்டிக் கொள்ளலாம் என்றும் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாட்டுத்தாவணி சாலையில் இருந்த ‘நக்கீரர் தோரண வாயில்’ இடித்து அகற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக நுழைவாயில் இடிந்து விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு கே.கே.நகர் பகுதியில் இருந்த ‘பெரியார் தோரண நுழைவாயில்’ பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இடிக்கப்பட்டது. விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் இப்பணி வெற்றிகரமாக நிறைவுற்றது. உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அமைக்கப்பட்ட நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ள நிலையில், மதுரையின் பிற பிரதான சாலைகளில் அமைந்துள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை தோரண நுழைவாயில்களும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதியும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் அந்தப் பகுதிகளில் உள்ள நுழைவாயில்களையும் அகற்றிவிட்டு, போக்குவரத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் புதிய தோரண வாயில்கள் அமைக்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு தற்போது மதுரை மக்களிடையே எழுந்துள்ளது.
