CINEMA
“விஜய் ஆட்சியைப் பத்தி சொல்ல ஜோசியக்காரனால தான் முடியும்…!””நான் அந்த அளவுக்கு தரங்கெட்ட ஆள் இல்ல!” – விஜய் விவகாரத்தில் ரஜினி ஆவேசம்…! கமல் கொடுத்த நச் பதில்…!
தமிழக முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, திரையுலகின் இரு துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். விஜய் சி.எம். ஆனதில் ரஜினிக்கு விருப்பமில்லை என்றும், அதனால்தான் அவர் வாழ்த்தாமல் அமைதி காக்கிறார் என்றும் பரவிய வதந்திகளுக்கு ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார். விஜய் மீது எனக்கு எவ்வித பொறாமையும் இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இரு பெரும் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தனித்து நின்று விஜய் பெற்ற வெற்றியைத் தான் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், திமுக – அதிமுகவை இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குத் தான் தரங்கெட்ட ஆள் இல்லை என்றும் ஆவேசமாக மறுத்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், ஒருவேளை தான் மட்டும் 2021-ல் கட்சி தொடங்கியிருந்தால் கண்டிப்பாக 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன் என்றும், கமல் முதலமைச்சர் ஆகியிருந்தால்கூட தான் பொறாமைப்பட்டிருக்க மாட்டேன் என்றும் கூறினார். மக்கள் மத்தியில் விஜய் மீது அதீத எதிர்பார்ப்பு இருப்பதால், அவர் அதனைப் பூர்த்தி செய்யக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதேசமயம், ரசிகர்களோ தொண்டர்களோ செய்யும் சிறிய தவறும் விஜய்யைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரஜினி அறிவுறுத்தினார்.
ரஜினிகாந்தின் இந்த அதிரடிப் பேட்டி குறித்துச் செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பியபோது, அவரும் தனது பாணியில் அதற்கு விளக்கமளித்தார். எனக்கும் ரஜினிக்கும் சினிமா துறையில் ஆரோக்கியமான போட்டி இருந்திருக்கிறதே தவிர, ஒருபோதும் பொறாமை இருந்தது இல்லை என்று கமல் தெளிவுபடுத்தினார். சினிமா மட்டுமின்றி தாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடியிருந்தாலும் இதே மனப்பான்மையுடன் தான் இருந்திருப்போம் என்றும் கூறினார். மேலும், புதிய முதலமைச்சரான விஜய்யிடம் சில கோரிக்கைகளைத் தான் சமர்ப்பித்திருப்பதாகவும் கமல் குறிப்பிட்டார்.
விஜய்யின் புதிய ஆட்சி குறித்துப் பேசிய கமல்ஹாசன், “ஆட்சி எப்படி இருக்கிறது என்று இரண்டே நாட்களில் சொல்ல வேண்டுமென்றால் அது ஜோசியத்தால் மட்டும்தான் முடியும்; வாக்களித்த மக்கள் தான் கவனித்துச் சொல்ல வேண்டும்” என்றார். மேலும், புதியவர்களைக் குறைவாக எடை போட முடியாது என்பதற்கு உவமையாக, சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவுக்குப் பொறுப்பேற்ற எல்லோருமே புதியவர்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கவுள்ளார் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
