LATEST NEWS
26 வருடப் பழிதீர்த்த நெதன்யாகு அரசு…! பியூபோர்ட் கோட்டை உச்சியில் மீண்டும் பறந்தது இஸ்ரேலின் தேசியக் கொடி… பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் விடுத்த நேரடி எச்சரிக்கை….!!
20-வது நூற்றாண்டின் இறுதியில், அதாவது 1982 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இஸ்ரேலியப் படைகளின் முக்கியப் பாதுகாப்புத் தளமாக விளங்கிய பியூபோர்ட் கோட்டை, தற்போது நடைபெற்று வரும் லெபனான் போரின் போது மீண்டும் இஸ்ரேல் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்ரேல் இப்பகுதியை லெபனானிடம் ஒப்படைத்த பிறகு, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இதனைக் தங்களது முதன்மையான தாக்குதல் மையமாகப் பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு லிட்டானி ஆற்றைக் கடந்து தங்களது இராணுவப் பேராற்றலை விரிவுபடுத்திய இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் (IDF), பியூபோர்ட் கோட்டையைக் கைப்பற்றி அதன் உச்சியில் மீண்டும் தங்களது தேசியக் கொடியையும், கோலானி படைப்பிரிவின் கொடியையும் பறக்கவிட்டுள்ளன.
இராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் இரகசியத் தன்மை கருதி இதுவரை மறைக்கப்பட்டிருந்த இந்தத் தாக்குதல் விபரம், தற்போது அதிகாரப்பூர்வமாகத் தணிக்கை நீக்கப்பட்டு எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், பிரதமர் நெதன்யாகுவின் நேரடி வழிகாட்டுதலின்படி, வடக்கு எல்லைப் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிரிகளின் அச்சுறுத்தலை ஒடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த தங்களது வீரர்களின் நினைவிடத்தில் இஸ்ரேலிய வீரத்தின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள அவர், ஹிஸ்புல்லாவின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் முற்றிலும் நசுக்கும் வரை இந்த ராணுவப் போர் நடவடிக்கை ஓயாது என்றும் எச்சரித்துள்ளார்.
