CINEMA
ஒரு நாளைக்கு 4 லட்சமா?…ராம் சரணின் நிழல் போல இருக்கும் ‘கெவின் குண்டா’…ரசிகரின் அத்துமீறலால் மேடையில் நடந்த ‘அந்த’ ஒரு காரியம்… டோலிவுட்டையே வியக்க வைத்த ராம் சரணின் மாஸ் முடிவு…!
சினிமா பிரபலங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்பது சாதாரண காரியமல்ல. பாலிவுட்டில் சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா, தமிழக முதலமைச்சர் விஜய்யின் நயீம் மூசா ஆகியோர் எப்போதும் பேசப்படுவது போல, தற்போது டோலிவுட் நடிகர் ராம் சரணின் தனிப்பட்ட பாதுகாவலர் கெவின் குண்டா சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின்போது, ஒரு ரசிகர் பாதுகாப்பு வளையத்தை மீறி ராம் சரணை நெருங்க முயன்றார். மேடையில் இருந்த நடிகை ஜான்வி கபூர் இதனால் சற்று பதற்றமடைந்த நிலையில், ராம் சரணின் பாதுகாவலர் கெவின், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த ரசிகரை அலேக்காகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினார். இந்த அதிரடி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இக்கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட பாதுகாவலரைப் பார்த்த பலரும், இவர் ‘பெத்தி’ படத்தில் ராம் சரணுடன் மோதும் ஒரு ஹாலிவுட் நடிகர் அல்லது தொழில்முறை மல்யுத்த வீரராக இருக்கலாம் என்றே முதலில் நினைத்தனர். ஆனால், இவர்தான் ராம் சரணின் பர்சனல் பாடிகார்ட் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. கெவின் குண்டாவின் உண்மையான பெயர் அப்து சோவ் (Abdu Sowe). ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டைச் சேர்ந்த இவர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு கலப்பு தற்காப்புக் கலை (MMA) வீரர் ஆவார். எந்தவொரு அவசரச் சூழ்நிலையையும் சில நொடிகளில் கட்டுக்குள் கொண்டு வரும் இவரது அசாத்திய தற்காப்புக் கலைத் திறமைதான், தற்பொழுது இவரைச் சினிமா வட்டாரங்களில் உற்று நோக்க வைத்துள்ளது. இதனாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த நான்கு வருடங்களாகத் தங்களது குடும்பத்தின் பாதுகாப்பை கவனித்து வரும் கெவினின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகிப் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேசப் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலை வீரரான இவருக்கு, ராம் சரண் ஒரு நாளைக்குச் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிக விலையுயர்ந்த பிரபல பாதுகாவலராக கெவின் கருதப்படுவார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கெவினின் இந்தப் புகழ் குறித்து ராம் சரணிடம் கேட்கப்பட்டபோது, “நீங்கள் அனைவரும் அவரை மிகவும் பிரபலமாக்கிவிட்டீர்கள். மக்கள் அவருக்குச் சாக்லேட்டுகள் கொடுத்து என்னைப் பற்றிய விஷயங்களை லஞ்சமாகப் பெற்று விடுவார்களோ என்று பயந்து, இப்போது நான் அவரை வெளியே எங்கும் அனுப்புவதில்லை” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
