LATEST NEWS
“ஆடைகளை கழற்றி, வீடியோ எடுத்து…” கிரிவல பாதையில் பெண்களை இழுத்து சென்ற கும்பல்… பணம், நகைகளை பறித்த கொடூரம்… அதிரடி காட்டிய போலீஸ்…!!
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் வழிமறித்த ஒரு கும்பல் அவர்களைக் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்றுள்ளது.
அங்கு அவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததோடு, அவர்களின் ஆடைகளைக் களைந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், பெண்ணின் கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, ‘கூகுள் பே’ மூலம் 4,000 ரூபாய் பணத்தையும் மிரட்டிப் பறித்துள்ளனர். தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய் தராவிட்டால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதால், பாதிக்கப்பட்டவர்கள் அவசரக் காவல் எண் 100-க்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதேபோன்று, திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதியில் அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 23 வயது இளம்பெண் ஒருவரும் கிரிவலம் சென்றபோது அய்யம்பாளையம் பைபாஸ் சாலையில் வைத்து ஒரு மர்மக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். அவரையும் அவரது ஆண் நண்பரையும் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி, பாலியல் சித்திரவதை செய்து, காதிலிருந்த 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர்.
அடுத்தடுத்து அரங்கேறிய இந்த அதிர்ச்சிப் புகார்களை அடுத்து, மாவட்டக் காவல் துறை 5 தனிப்படைகளை அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியது. இதில் ஆடையூர் வாசுதேவன், ஆகாஷ், அப்பு, அரிகரன், சர்மா, அருண்குமார், சிவகணேசன் மற்றும் 16 வயதுச் சிறுவன் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய மீதமுள்ள 3 குற்றவாளிகளைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
