CINEMA
எம்.ஜி.ஆர் படத் தலைப்பில் சமந்தாவின் புதிய படம்…அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ராங்…சமந்தா, நந்தினி ரெட்டியைப் பார்த்து வியந்த கௌதமி…இது வெறும் பெண் சக்தி அல்ல… திறமையின் ஆட்டம்…!
நடிகை சமந்தா தயாரித்து, நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கில் ‘மா இன்டி பங்காரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு, தமிழில் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற படத் தலைப்பான ‘எங்கள் தங்கம்’ என்ற அழகான தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்ச்சியில் சமந்தா, கௌதமி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படம் குறித்த தங்களது சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாக்களைத் தவிர்த்துவிட்டு தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகை கௌதமி, சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தீவிரமாக உழைத்து வருகிறார். கடைசியாக சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது மீண்டும் சமந்தாவுடன் இணைந்து ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னை விழாவில் பேசிய கௌதமி, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்றே தெரியவில்லை. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நீடித்திருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு இந்தப் பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சமீபகாலமாக அதிக படங்களை ஒப்புக்கொள்ளாத தான், இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான் என்று கௌதமி தெரிவித்தார். படத்தின் தூண்களாக விளங்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டியின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் கண்ணியத்தை வெகுவாகப் பாராட்டிய அவர், பலர் இதனை ‘உமன் பவர்’ (பெண் சக்தி) என்று கூறினாலும், தனது பார்வையில் இது ‘டேலண்ட் பவர்’ (திறமையின் சக்தி) என்று குறிப்பிட்டார். சிறந்த கதை, இயக்கம், தயாரிப்பு மற்றும் இசையோடு உருவாகியுள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் கண்டிப்பாக அனைவரது மனதையும் தொடும் ஒரு அழகான படமாக இருக்கும் என்றும் அவர் வாழ்த்தினார்.
