LATEST NEWS
பெயரை மாற்றலாம்… ஆனால்…! இளைஞர்களின் வளர்ச்சியை முடக்காதீங்க…! தவெக அரசை நோக்கி பாயும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு…!!
திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர், தற்போது புதிய தவெக ஆட்சியில் “திறன் தமிழ்நாடு” என மாற்றப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றத்துடன் அத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டதற்குத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடைந்த நன்மைகளையும் அவர்களின் நன்றியுணர்வையும் மக்கள் மனதிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற நவீனப் பயிற்சிகளுடன் ஐஏஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய தங்கும் வசதியை இத்திட்டம் வழங்கி வந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட இந்த முதன்மைத் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தற்போதைய ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் மே 15-க்குப் பிந்தைய பதிவுகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ள சூழலில், மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
