CINEMA
இறுதிக்கட்டத்தை எட்டிய ‘சூர்யா 47’…மீண்டும் காக்கி சட்டையில் சூர்யாவா?…ஜித்து மாதவன் படத்தில் மோகன்லால் இருக்காரா? இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘சூர்யா 47’ இயக்குநர்…!
நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த திரைப்பட அறிவிப்புகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள ‘சூர்யா 47’ ஆகிய படங்கள் மீதான ஆர்வம் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. இதன் காரணமாக, படம் வெளியாகும் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் எனத் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கணித்துள்ளனர்.
இதற்கிடையில், ‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இச்செய்தியை மறுத்துள்ள இயக்குநர் ஜித்து மாதவன், படத்தின் முதல் போஸ்டரே இன்னும் வெளியாகாத நிலையில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மோகன்லால் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
