CINEMA
“பிரகாஷ்ராஜை அரபிக்கடலில் மீன்களுக்கு இரை ஆக்கிருவோம்” பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பகிரங்க கொலை மிரட்டல்… அதிரும் அரசியல் களம்..!!
டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்துப் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜ், மத்திய அரசைச் சாடிப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா, நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். மேலும், அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அரபிக்கடலில் தூக்கி வீசப்பட்டு, மீன்களுக்கு இரையாக மாறுவார் என பகிரங்கமாக அச்சுறுத்தும் வகையில் சர்ச்சையாகப் பேசினார். வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் வன்முறையைத் தூண்ட சில அமைப்புகள் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில், டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல என்றும், அவர்களின் பின்னணியைச் சோதித்தால் உண்மை வெளிவரும் என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க.வினர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் படங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் மீது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து தங்களது விசித்திரமான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இத்தகைய அரசியல் நீடித்தால் பா.ஜ.க. தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் அந்த மேடையில் எச்சரித்துள்ளார்.
