LATEST NEWS
BREAKING: ரூ.35 கோடி குதிரை பேர வழக்கில் 5 பேர் சிறையிலடைப்பு… செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது 4 பிரிவுகளில் வழக்கு..!!
மிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்க இந்த பேரம் பேசப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான திமுக பிரமுகர்கள் சக்தி மெஸ் கார்த்தி, ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த பேரம் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தலைமறைவாக உள்ள அசோக் குமார் மீது கொலை மிரட்டல், குற்றச் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின்படி, பேரம் பேசப்பட்ட விவரத்தை வெளியில் கூறினால் குடும்பத்தினர் உயிருடன் இருக்க முடியாது என்றும், ஒத்துழைக்க மறுத்தால் எம்எல்ஏ இளையராஜாவை உயிருடன் நடமாட விடமாட்டோம் என்றும் திருநாவுக்கரசு என்பவர் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 108 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த குதிரை பேர விவகாரம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
