CRIME
காசுக்காக இப்படியா பண்ணுவாங்க..? 5 வயது சிறுவனைக் கொன்று சாக்குப்பையில் வீசிய கொடூரன்…! கோரக்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வா பகுதியில், 5 வயது சிறுவன் பணத்திற்காகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரா பகுதியைச் சேர்ந்த விபின் சிங் என்பவரின் ஒரே மகனான அன்ஷுமான் சிங் என்ற 5 வயது சிறுவன், கடந்த ஜூலை 2ஆம் தேதி மாலை தனது பாட்டியிடம் பானிபூரி சாப்பிட பணம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவனது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவன் சென்ற வழியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவன் அன்ஷுமான் சிங் ஏதோ தெரியாத நபருடன் செல்லாமல், அவனது சொந்த வீட்டிலேயே குடியிருந்த கல்பேஷ் என்ற வாடகைதாரருடன் சேர்ந்தே செல்வது சிசிடிவி காட்சியில் தெளிவாகத் தெரிந்தது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கல்பேஷைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியபோது, அவன் காட்டிய இடத்தில் உள்ள புதர்களுக்கு இடையே ஒரு பாழடைந்த கட்டிடத்தில், சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனின் சடலம் வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட வாடகைதாரர் கல்பேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவனுக்கு வேலை பறிபோனதால் கடும் பண நெருக்கடியில் இருந்ததாகவும், வீட்டின் வாடகை மற்றும் சொந்த செலவுகளுக்காக வீட்டு உரிமையாளரின் மகனைக் கடத்தி பெரிய தொகையை மீட்டுத்தொகையாக பெற திட்டமிட்டதாகவும் கூறினான். ஆனால் கடத்தலின் போது சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்ததால், பயந்துபோய் சடலத்தை சாக்குப்பையில் கட்டி பாழடைந்த கட்டிடத்தில் வீசியதாகத் தெரிவித்தான். தற்போது காவல்துறையினர் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, கல்பேஷை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
