CRIME
பஞ்சாபில் பயங்கரம்.. மூன்று குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட கொடூரம்…! பின்னணி என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!
பஞ்சாப் மாநிலம் மான்சாவில், சந்தீப் கவுர் என்ற பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், வியாழக்கிழமை மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது மூன்று குழந்தைகளும் அதே வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
பலியான குழந்தைகள் குஷ்பிரீத் கவுர் , சமன்பிரீத் கவுர் மற்றும் ஒரு இரண்டு வயது ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூத்த மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்றும், மற்ற இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்களின் உண்மையான மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று மான்சா நகர காவல் நிலைய அதிகாரி குல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
சந்தீப் கவுரின் கணவர் சில மாதங்களுக்கு முன்புதான் இறந்துவிட்டதாகவும், அவரது தாய் ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் கிடைக்காத நிலையில், அந்தப் பெண் ஏன் இத்தகைய கொடூரமான முடிவை எடுத்தார் என்பதற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
