LATEST NEWS
“பெரிய தப்பு பண்ணிட்டேன், தயவுசெஞ்சு யாரும் வராதீங்க” மெக்சிகோ ‘டாங்கி’ பாதையில் சிக்கிய பஞ்சாப் வாலிபரின் ரத்தக் கண்ணீர் வீடியோ..!!
மெக்சிகோவில் சட்டவிரோத ‘டாங்கி’குடியேற்றப் பாதையைப் பயன்படுத்திச் சிக்கிக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய இளைஞர் ஒருவர், கண்ணீருடன் வெளியிட்ட 33 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஒரு அறையில் படுக்கையில் படுத்தபடி, கைகளைக் கூப்பிக் கெஞ்சும் அந்த இளைஞர், சட்டவிரோத முகவர்களை நம்பி யாரும் இந்தத் தவறைச் செய்ய வேண்டாம் எனப் பிறருக்குக் கண்ணீர்மல்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், சட்டவிரோதக் கடத்தல் வலையமைப்பில் இருந்து தான் தப்பிக்க முயன்றதால், அங்கிருந்தவர்கள் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். தப்பியோட முயன்றதற்காக அடித்துத் துன்புறுத்தப்பட்டதால், தன்னால் தற்போது ஒழுங்காக நடக்கக் கூட முடியவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். தன்னை அங்கு அழைத்து வந்த நபரே தற்போதைய வீடியோவைப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விலையை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சட்டவிரோதமாகப் பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து நுழைவதற்கே இந்த ஆபத்தான ‘டாங்கி’ குடியேற்றப் பாதை பயன்படுத்தப்படுகிறது. முறையான கல்வித் தகுதி மற்றும் விசா பெற முடியாதவர்களைக் குறிவைத்து, 20 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் வரை முகவர்கள் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பான பயணம் என்று கூறி அழைத்துச் செல்லப்படும் குடியேறிகள், வழியில் கடுமையான சுரண்டல், வன்முறை, கடத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்களை எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இந்த பஞ்சாப் இளைஞரின் வீடியோ தற்போதைய சாட்சியாக மாறியுள்ளது.
