LATEST NEWS
“மண்டையை உடைச்சேன்… ஆனா ஜெயிலுக்கு போகல… ” இன்ஸ்டா பிரபலத்தின் பேச்சால் வெடித்த சர்ச்சை..! பாஜகவைச் சீண்டும் எதிர்க்கட்சிகள்…!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தியபோது, போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர். சீருடையற்ற சிலரும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தின் போது மாணவி ஒருவரின் தந்தையான சஞ்சய் குமார் என்பவரின் மண்டையை உடைத்தும் தான் சிறைக்குச் செல்லவில்லை என சுவதந்திர பரத்வாஜ் என்ற 21 வயது இன்ஸ்டா பிரபலம் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1.84 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட அவர், தனது பாஜக தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாகக் கூறியதுடன், 60 தையல்கள் போடப்பட்ட நிலையிலும் தான் சுதந்திரமாக சுற்றியதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோக்கள் வைரலான நிலையில், அது தற்காப்புக்காகச் செய்யப்பட்ட நடவடிக்கை என அவர் பின்னணி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிக்கு பாஜக பாதுகாப்பு அளிப்பதாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சிஜேபி கட்சியினர் இதில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்திய நிலையில், டெல்லி காவல்துறை சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான் என்றும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
