LATEST NEWS
“டிக்கெட்டுக்கு சில்லறை இல்லையா?.. பஸ்ஸை விட்டு இறங்குங்க!”.. பெங்களுருவில் அமைச்சருக்கே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து கொண்ட அவர், பூபசந்திரா பகுதியிலிருந்து ஹெப்பல் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் சாதாரணப் பயணியைப் போலப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு இரண்டு டிக்கெட்டுகளுக்காக 100 ரூபாய் நோட்டைக் கொடுத்த அமைச்சரிடம், டிக்கெட் கட்டணமான 12 ரூபாயைச் சரியாகத் தருமாறு நடத்துனர் கேட்டுள்ளார். தன்னிடம் சில்லறை இல்லை என்று அமைச்சர் கூற, “என்னிடமும் சில்லறை இல்லை, சரியான தொகையைத் தர முடியாவிட்டால் பேருந்தை விட்டு இறங்குங்கள்” என நடத்துனர் கறாராகக் கூறியுள்ளார். முகமூடி அணிந்திருந்ததால் அமைச்சரை அடையாளம் காண முடியாத நடத்துனரின் பேச்சைக் கேட்டு, அவரோடு வாக்குவாதம் செய்யாமல் அமைச்சர் அமைதியாகப் பேருந்தை விட்டு கீழே இறங்கினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாலை முதல் இரவு வரை பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் அமைச்சர் தீவிர ஆய்வு நடத்தினார். பணிமனைகளின் செயல்பாடுகள் மற்றும் தினசரி பேருந்து சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தவர், பேருந்து நிலையங்களில் இருந்த பயணிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் முடிவில், சில்லறைப் பிரச்சனைக்காகத் தன்னை இறக்கிவிட்டது போலப் பயணிகளை அலைக்கழித்த ஊழியர்களை நேரில் அழைத்து அமைச்சர் கடுமையாக எச்சரித்தார். மேலும், தங்களது கடமையில் இருந்து தவறிய சில அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்ய அமைச்சர் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
