LATEST NEWS
புழல் அருகே சோகம்..! இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு… மேலாளர் உட்பட 3 பேர் கைது..!!!
சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்தன்று காலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனான ஷாருக் ஈஸ்வரன் என்பவன் தன் தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் இரும்புத் தகடு ஒன்றை தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
திடீரென இரும்புத் தகட்டைத் தூக்கிக் கொண்டிருந்த ரோப் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இதில் அங்கிருந்த இரும்புத் தகடு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் மீது பலமாக விழுந்தது. இதனால் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த கோர விபத்து குறித்து உயிரிழந்த சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பாதுகாப்பு குறைபாடுகளுடன் அலட்சியமாகச் செயல்பட்டதாக, பாதாளச் சாக்கடை திட்ட மேலாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் ஜே.சி.பி ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
