LATEST NEWS
“நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசல… அதுதான் உண்மை..!” இது ஆட்சியா இல்லை சர்க்கஸா….? உதயநிதி ஸ்டாலின் வீசிய அதிரடி கணை… தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி விவகாரக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் முடிந்த பின் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேட்டூர் அணையில் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படாதது குறித்தும், கர்நாடக அரசை எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத மாநில அரசின் மெத்தனப் போக்கு குறித்தும் விவசாயிகள் நலன் சார்ந்தே தான் பேசினதாகத் தெரிவித்தார்.
தனது பேச்சை தவறாகத் திரித்து அரசியல் ஆதாயத்திற்காகப் பரப்புவதாகவும், மாநிலத்தில் எழும் உண்மையானப் பிரச்சினைகளை மடைமாற்றவே இந்தத் திடீர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒரு தீவிரவாதியைக் கொண்டு செல்வது போல மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்போடு, 400 கிலோமீட்டர் தூரம் சாலை வழியாகத் தஞ்சாவூருக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பொய் வழக்கைக் சட்டப்பூர்வமாகச் சந்திப்பேன் என்றும், எந்தப் பெண்ணையும் தாழ்த்திப் பேச வேண்டிய எண்ணம் தமக்கு துளிக்கூட இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், விவசாயிகள் உரிமைக்காகவே தான் குரல் கொடுத்ததாகவும், காவிரி தண்ணீர் பெறப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், முழுமையானப் பேச்சைப் பார்க்காமல் கண்டனம் தெரிவித்த சில அரசியல் தலைவர்களின் செயல் வருத்தமளிப்பதாகக் கூறினார். தற்போதைய ஆட்சி முறையை விமர்சித்த அவர், திமுக தொண்டர்களும் தலைவர்களும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டார்கள் என்றும், மக்கள் விரைவில் இதற்குத் தகுந்த பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.
இறுதியாக, இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய முக்கியக் களம் குறித்துத் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார்.
