LATEST NEWS
“போலீஸ்னா பயமே இல்லையா..?” 59 வயதில் 3-வது திருமணம்..! 15 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு கழட்டிவிட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ.. டிஜிபி ஆபீசில் கதறிய 2-வது மனைவி..!!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கப்பன் என்பவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஏற்கனவே கலைச்செல்வி என்ற முதல் மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் மூக்கப்பன் பணியாற்றியபோது, அங்கு வந்த விஜயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான விஜயாவை, அவரது கணவர் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூக்கப்பன் அவரைத் திருமணம் செய்து கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூக்கப்பனின் செல்போன் பதிவுகளை விஜயா சோதித்தபோது, அவர் லதா என்ற தனியார் பள்ளி ஆசிரியையுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. விஜயாவின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது 59-வது வயதில் லதாவை மூக்கப்பன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டாவது மனைவி விஜயா, சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்த புகார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கைச் சரியாக விசாரிக்காமல் புகார் மீது மேல்நடவடிக்கை வேண்டாம் என விஜயாவிடம் எழுதி வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது லதாவுடன் வசித்து வரும் மூக்கப்பன், தன்னை முற்றிலும் புறக்கணித்து விட்டதாக விஜயா கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவருக்காக வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவித்து வருவதாகவும், தன்னுடைய நகைகளையும் மூக்கப்பன் அடமானம் வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் விஜயா வேதனை தெரிவித்துள்ளார். மூன்று பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது அவரது இரண்டாவது மனைவி அளித்துள்ள இந்த புகார் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
