LATEST NEWS
“கொண்டைய மறைக்காம விட்டுட்டீங்கப்பா..!” அண்ணாமலையின் புது இயக்கத்தை.. வடிவேலு பாணியில் கலாய்த்த மாணிக்கம் தாகூர்..!!
தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனியாக ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கி அதன் சார்பாக மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார். அவரின் இந்த புதிய அரசியல் நகர்வு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அண்ணாமலையின் இந்த புதிய முயற்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கங்கள் அல்லது அமைப்புகளைத் தொடங்கலாம் என்றும், அதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும் கூறி அண்ணாமலைக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இருப்பினும், அண்ணாமலை பேசும்போது தனக்கும் பாஜகவிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போலக் காட்டிக்கொள்ள முயல்வதை மாணிக்கம் தாகூர் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். இது நடிகர் வடிவேலுவின் புகழ்பெற்ற நகைச்சுவை காட்சியைப் போல, “தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டு மாட்டிக்கொள்வது” போல் உள்ளது என்று விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவின் முகமாக இருந்துகொண்டே, மக்கள் மத்தியில் தனியாக ஒரு பிம்பத்தை உருவாக்க அண்ணாமலை போடும் திட்டம் ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
