LATEST NEWS
“அடப்பாவமே..! வாங்கி ஒரே மாசம் தான் ஆச்சு… பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே வெடித்துச் சிதறிய புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்..! கைகளிலும் உடலிலும் பலத்த தீக்காயங்களுடன் கதறும் வாலிபர்..!!”
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நோய்டாவில், காசியாபாத்திலிருந்து தன்கவுர் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த மஜித் என்ற இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாம்சங் ஸ்மார்ட்போன் திடீரென அளவுக்கு அதிகமாக சூடாகி, புகை வெளியேறி வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் போனின் பாகங்கள் நாலாபுறமும் சிதறியதோடு, அவரது ஆடைகளிலும் தீப்பற்றியது. இதனால் மஜித்தின் இரு கைகள் மற்றும் உடலின் கீழ் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட மஜித் தெரிவிக்கையில், இந்த சாம்சங் மொபைலை அவர் கிரேட்டர் நோய்டாவில் உள்ள ‘தி கிராண்ட் வெனிஸ் மாலில்’ இயங்கி வரும் டிஜி காம் கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக வாங்கியுள்ளார். இந்தச் சம்பவம் நடக்கும் வரை போன் சாதாரணமாகவே இயங்கி வந்ததாகவும், அதில் எந்தவொரு கோளாறும் தென்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வாங்கி ஒரே மாதத்தில் புதிய ஸ்மார்ட்போன் வெடித்து ஆடைகளில் தீப்பற்றிய இந்தச் சம்பவம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்புக்கான துல்லியமான காரணம் என்னவென்று தொழில்நுட்ப ஆய்வு மூலம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் உள் கோளாறுகள் அல்லது அதிக வெப்பம் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் எனக் கருதப்படுகிறது. செல்போன்கள் திடீரென அதிகளவில் சூடானாலோ, வீங்கினாலோ அல்லது புகை வந்தாலோ அதை அலட்சியப்படுத்தாமல் உடனே பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
