LATEST NEWS
திருடி முடிச்சதும் பாய விரிச்சி படுத்தாச்சி..! நகை, போனுடன் அதே வீட்டில் குறட்டை விட்ட ‘போதை’ திருடன்… கடைசியில் நடந்தது தெரியுமா..??
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடி ஷரீஃப் காவல் எல்லைக்குட்பட்ட வாடி-ஏ-முஸ்தபா பகுதியில் ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. போதை மயக்கத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒருவன், அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் செல்போன்களைத் திருடியுள்ளான். ஆனால், திருடிய பிறகு தப்பிச் செல்லாமல், அதே வீட்டிற்குள்ளேயே சாவகாசமாகப் பாய விரித்துப் படுத்து உறங்கியுள்ளான்.
வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிற்குத் திரும்பியபோது, அலமாரி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, தரைத்தளத்தில் யாரோ ஒரு நபர் போர்வையைப் போர்த்திக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். சந்தேகமடைந்து அவனருகே சென்று சோதனையிட்டபோது, அவனிடம் தங்களது திருட்டுப்போன தங்க நகைகளும் போன்களும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடும்பத்தினர் அந்த நபரை எழுப்பி, அவர் திருடியதை ஒப்புக்கொள்ளும் வீடியோவை எடுத்த பின்னர், பஹாடி ஷரீஃப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதிகப்படியான போதை காரணமாகத் தான் எந்த வீட்டில் திருடினோமோ அதே வீட்டில் தூங்கிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அந்தத் திருடனைக் கைது செய்து மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.
