LATEST NEWS
“இதுதான் அரசியல் அறமா..?” “வி.சி.க.வை அழிக்க நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்..!” திமுக மீது திருமாவளவன் மறைமுகப் பாய்ச்சல்..!!!
தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். சமீபத்தில் வி.சி.க.வின் முக்கிய நிர்வாகியான பனையூர் பாபு திமுகவில் இணைந்ததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர், வி.சி.க.வை எப்படியாவது சிதறடித்து பலவீனப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தான் ஒருபோதும் யாரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என நினைத்ததில்லை என்றும் அவர் கூறினார்.
கூட்டணி தர்மம் மற்றும் அரசியல் அறம் குறித்து திருமாவளவன் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நீண்ட காலமாக இணைந்து பணியாற்றும் ஒரு கூட்டணிக் கட்சியிலிருந்து ஒருவர் விலகி தன்னிடம் வரும்போது, “திருமாவளவன் எங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறார், அவர் எங்களுக்குத் தேவை, எனவே நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம்” என்று கூறி திருப்பி அனுப்புவதே உண்மையான அரசியல் அறம் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், வி.சி.க.வை பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கிலேயே அவரைத் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு இயக்கம் எடுத்த இந்த முடிவு, தனது இதயத்தில் முள் குத்தியதைப் போன்ற வலியை ஏற்படுத்தியதாகத் திருமாவளவன் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்தார். எனினும், இத்தகைய செயல்களால் வி.சி.க.வை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், லட்சக்கணக்கான தொண்டர்களையும், நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படைத்தளபதிகளையும் கொண்டு இந்த இயக்கம் மிகவும் வலிமையுடனும் பற்றுதலுடனும் இயங்கி வருவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.
