LATEST NEWS
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர விபத்து… கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கிய ஜீப்… 3 உயிர்கள் பறிபோன கொடூரம்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஒரு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி பகுதிக்கு அருகே ஜீப் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த ஜீப், சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தின் தாக்கத்தால் ஜீப்பில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஜீப்பில் இருந்த மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
