LATEST NEWS
“நடந்து சென்ற போது நேர்ந்த விபரீதம்… கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நபர்! பின்னணி என்ன?”
தலைநகர் டெல்லியின் அசோக் விகார், கேசவ் புரம் பகுதியில் கடந்த 9-ஆம் தேதியன்று படுகாயங்களுடன் ஒரு நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நெஞ்சு மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் பன்சி லால் என்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஐந்து சிறுவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில், சேறும் சகதியுமான சாலையில் நடந்து செல்லும்போது தற்செயலாக தங்கள் மீது பன்சி லால் சேற்றை தெறிக்கச் செய்துவிட்டதால், அந்த சிறுவர்களுக்கு அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது; அந்த ஆத்திரத்திலேயே அவரை கத்தியால் குத்திக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஐந்து சிறுவர்களையும் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
