LATEST NEWS
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்..! இனி AI பாடமும், வெளிநாட்டுப் பயிற்சியும்… முதலமைச்சர் விஜய்யின் மெகா பிளான்..!!”
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக அவர் தினமும் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வுகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் நிதித்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் ஆகிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளி வகுப்பறைகளையும் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ அறைகளாக மாற்றுவது குறித்தும், சிறந்து விளங்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு அனுப்பி உயர் பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் இந்த ஆய்வில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில், தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் விபரங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதோடு, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்புவது, ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவது மற்றும் வரவிருக்கும் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த ஆலோசனையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
