LATEST NEWS
போலி ஆபீஸா?… நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு ஆப்பு..! பி.டி. அரசகுமார் கைது… காவல்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் அரசியல்வாதியான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சென்னை சாலிகிராமத்தை மையமாகக் கொண்டு, பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு போலி அமைப்பை நடத்தி வந்துள்ளார். பள்ளிகளின் தரம் உயர்த்துதல், சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அரசு அனுமதிகளை எளிதாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மாபெரும் நிதி மோசடியை அவர் அரங்கேற்றியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகப் பல தனியார் பள்ளிகள் சந்தித்த உள்கட்டமைப்பு மற்றும் அங்கீகாரச் சிக்கல்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசகுமார், பல பள்ளி நிர்வாகங்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு எந்தப் பணிகளையும் செய்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, பொருளாதாரக் குற்ற ஆவண மோசடி தடுப்புப் பிரிவின் உதவி ஆணையர் செந்தில் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அரசகுமாரை போதிய ஆதாரங்களுடன் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பி.டி. அரசகுமாரின் இந்த மாபெரும் மோசடிச் செயல், அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரது வங்கிப் பரிவர்த்தனைகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்துக் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இவரிடம் இதுபோன்று பணத்தைக் கொடுத்து ஏமாந்த மற்ற பள்ளி நிர்வாகங்களும் எவ்விதத் தயக்கமும் அச்சமும் இன்றி மத்திய குற்றப்பிரிவை அணுகி தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என சென்னை காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
