LATEST NEWS
எ.வ.வேலு மீது பாயும் வழக்கு..? ரூ.8 கோடி ஏரி மண் திருட்டுப் புகார்… அறப்போர் இயக்கம் கொடுத்த பகீர் ஆதாரங்கள்… ஊழல் செய்பவர்களை விடாமல் துரத்தும் தவெக அரசு…!!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆதாரங்களுடன் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புகாரில், டிசம்பர் 14, 2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டிற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி அரசு ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் திருடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி சுமார் 10 முதல் 23 அடி ஆழம் வரை, கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் தோண்டி எடுக்கப்பட்டு எ.வ.வேலுவின் மகன் குமரனுக்குச் சொந்தமான கலைஞர் திடல் நிலத்தைச் சமன்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத மண் அள்ளும் முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.8 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாடு நடத்தப்பட்ட கலைஞர் திடல் நிலத்தை நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு எ.வ.வேலுவின் குடும்பத்தினர் வாங்கியதிலும் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே அவர் மீது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த புதிய மண் திருட்டுப் புகாரின் காரணமாக எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
