LATEST NEWS
திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்…! பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி..! ராமேஸ்வரத்தில் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு..!!
இந்தியாவின் முக்கியப் புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. அங்கு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் கொடுத்தும், கோவிலில் உள்ள 22 தீர்த்தக்ணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை போன்ற சுற்றுலாப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, நேற்று காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகப் பல அடி தூரத்திற்குத் திடீரெனக் கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும், பாசிகளும் வெளியே தெளிவாகத் தெரிந்தன. கடல் உள்வாங்கியதன் காரணமாக அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்து, தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 9 மணி வரை இவ்வாறு உள்வாங்கி இருந்த கடலானது, நேரம் செல்லச் செல்லப் படிப்படியாக மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்தத் திடீர் மாற்றம் குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், காற்று காலங்களில் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் துறைமுகப் பகுதிகளில் கடல் நீர் இவ்வாறு உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமான ஒரு இயற்கை நிகழ்வுதான் என்று தெரிவித்து விளக்கமளித்தனர்.
