DISTRICT NEWS
“அம்மா இல்லாத வீட்டில் அப்பாவும் இல்லை…” அநாதையாய் நடுத்தெருவில் தவிக்கும் 3 பிஞ்சுகள்…! கயத்தாறில் நிகழ்ந்த சோகம்..!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கார்த்திகா, சுமித்ரா என்ற இரு மகள்களும், அருண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின் மனைவி செல்லத்தாய் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல், கருப்பசாமி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மனவேதனையுடனும், மனமுடைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று காலையில் கருப்பசாமி தனது குழந்தைகளுடன் தேநீர் அருந்திவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது தாயார் தங்கமாரியம்மாள் வழக்கம்போல வயல் வேலைக்குச் சென்ற நிலையில், குழந்தைகளும் சிறிது நேரத்தில் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத அந்த நேரத்தில், கடுமையான மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய குழந்தைகள், கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உடலை மீட்டனர். தகவலறிந்து வந்த கயத்தாறு காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் 3 குழந்தைகளின் நிலை அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
