CRIME
“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை!”.. காதலன் சொன்ன ஒரே ஒரு பொய்.. 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்… போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில் நகைகளைச் சரிபார்த்தபோது, பன்னீர்செல்வனின் நகைகளுடன் சேர்த்து அவர்களுக்குச் சொந்தமான 107 பவுன் நகைகளும் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படாததால், குடும்பத்தினரே இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், பன்னீர்செல்வனின் அண்ணனின் 3-வது மகளான 18 வயது பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின.
கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது தற்காலிக வேலைக்குச் சென்ற அந்தச் சிறுமிக்கு, அங்கு வேலை செய்த செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், தனது தந்தையின் மருத்துவச் செலவிற்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி நயமாகப் பேசியதை நம்பி, அந்தச் சிறுமி வீட்டில் இருந்த மொத்தம் 129 பவுன் நகைகளையும் யாருக்கும் தெரியாமல் சிறுகச் சிறுகத் திருடி அவரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியிடம் வாங்கிய நகைகளை கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும் விற்றும் பணமாக்கி, அதில் புதிய கார், இருசக்கர வாகனம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனது நண்பர்களான குமரகோபால், பிரகாஷ், ரமேஷ், சூர்யா ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
