CRIME
பணத்துக்காக இப்படியா..? 40 லட்சம் இன்சூரன்ஸுக்கு ஆசைப்பட்டு… மனைவி காணாமல் போனதாக நாடகமாடிய… கணவன் மாட்டிக்கொண்டது எப்படி..?!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 40 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அடைவதற்காகத் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹமீர்பூர் – ராத் நெடுஞ்சாலையில் லல்பூரா பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகே பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கொல்லப்பட்ட ரீட்டா என்ற பெண்ணிற்கு 2002-இல் முதல் திருமணம் நடந்து, அதில் நான்கு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் இறந்த பிறகு, அவர் அமர் சிங் என்பவரைக் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். திட்டமிட்டபடி அமர் சிங், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரீட்டாவின் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்து, அதற்கான முதல் தவணையாக 2.60 லட்சம் ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகத் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அமர் சிங் ரீட்டாவைக் கொலை செய்துள்ளார். பின்னர் இது ஏதோ வாகனம் மோதி நடந்த விபத்து போலக் காட்டுவதற்காக, ரீட்டாவின் சடலத்தின் மீது காரை ஏற்றியுள்ளனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத் தானே காவல் நிலையத்திற்குச் சென்று மனைவி காணாமல் போனதாகப் புகார் அளித்த அமர் சிங்கிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அமர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
