DISTRICT NEWS
“3 ஆண்டுகள் கழித்து மாட்டியது எப்படி?”ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்..மகனை வெட்டி ஆற்றில் வீசிய தந்தை..முடிவுக்கு வந்த மர்மம்..!
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வேந்தர் பாலா, தனது முதல் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் ஸ்ரீகாந்தை நிர்கதியாக விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இதனால் அவரது முதல் குடும்பம் வறுமையில் வாடியதோடு, தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல்களும் பகையும் ஏற்பட்டு வந்தன. இந்த விரோதத்தை என்றென்றைக்குமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சமாதானம் பேசுவதாகக் கூறி மகனை நயவஞ்சகமாக வயல்பட்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார் பாலா. அங்கு தனது நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கருப்பசாமி ஆகியோருடன் இணைந்து, தான் பெற்ற மகனையே ஈவுஇரக்கமின்றி துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ததோடு, உடல் பாகங்களை முல்லைப் பெரியாற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வாழ்ந்து வந்துள்ளார்.
மகன் நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாய் ராஜலட்சுமி, காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு, தனது கணவர் மீதுள்ள சந்தேகத்தின் பேரில் மதுரை உயர் நீதிமன்றத்தையும் நாடினார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளிவந்தன. தீவிர விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், பாலா மற்றும் அவனது கூட்டாளி அலெக்ஸ் பாண்டியனைக் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் இந்த கொடூரக் கொலை சம்பவம் அம்பலமானது. குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் காட்டிய பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியான கருப்பசாமியை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
