DISTRICT NEWS
“என் அண்ணனுக்கு எந்த நோயும் இல்லை… அடிச்சு கொன்னுட்டு வலிப்புன்னு பொய் சொல்றாங்க..! அருணாச்சலம் மரணத்தில் தம்பி எழுப்பும் பகீர் குற்றச்சாட்டு..!!”
தூத்துக்குடி அமுதநகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அரசு மதுபானக்கூட ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கடை மூடியிருந்த நேரத்தில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, தாளமுத்து நகர் மற்றும் தென்பாகம் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அவரை 120 மதுபாட்டில்களுடன் கைது செய்தனர். பின்னர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் உடல் தகுதிச் சான்று பெற்ற பிறகு, காவல் நிலைய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தக்கசிவு அதிகமானதால், அவருக்கு ஜூலை 21-ஆம் தேதி தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அருணாச்சலம் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி கூறுகையில், “என் அண்ணனுக்கு எந்த நோயோ அல்லது வலிப்போ கிடையாது; காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார்” எனக் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாகவும், நீதித்துறை நடுவர் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
