CRIME
“நான்தான் உன் வாழ்க்கை!”.. கணவன் இல்லாத பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி பணத்தோடு எஸ்கேப் ஆன ‘காதல் மன்னன்’… கையும் களவுமாக சிக்கிய பகீர் பின்னணி..!!
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், ஆதரவற்ற மற்றும் கணவனைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே மனைவியைப் பிரிந்த இவர், துணிக்கடையில் வேலை பார்த்தபோது கணவனை இழந்த பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, அவரது நகை மற்றும் பணத்தில் கார் வாங்கி உல்லாசமாகச் சுற்றிவந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் பணம் தீர்ந்ததும் காரை அடமானம் வைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி செய்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் கமலக்கண்ணனை முதன்முதலில் 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது புத்தியை மாற்றிக்கொள்ளாத கமலக்கண்ணன், 2021-ஆம் ஆண்டு தனது நண்பனின் மனைவி வைஷாலியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததைப் பயன்படுத்தி, காரை ஓட்டிச் சென்று நல்லவன் போல நடித்துள்ளார். பின்னர் தந்திரமாக கணவன்-மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கி, வைஷாலிக்கு ஆறுதல் சொல்வது போல நடித்து அவரோடு பழகியுள்ளார். ஓசூர் மருத்துவமனைக்குச் சென்றபோது வைஷாலியின் தாயார் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைத் திருடி நாடகமாடியதுடன், தாயார் மறைவிற்குப் பிறகு வைஷாலிக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பணத்தையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளார்.
வைஷாலியையும் அவரது மகளையும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறி பாஸ்போர்ட் மற்றும் வேலைக்காக பல லட்சம் ரூபாயையும், நகைகளையும் பெற்றுக்கொண்டு மீண்டும் ஓட்டம் பிடித்துள்ளார். வெளிநாட்டில் இருப்பது போல நடித்த கமலக்கண்ணனின் மோசடியை உணர்ந்த வைஷாலி, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கமலக்கண்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். சிறைக்குச் செல்லும்போது செய்தியாளர்களைப் பார்த்துச் சிரித்தபடியே ‘டாடா’ காட்டிச் சென்ற இவரது செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்களைக் குறிவைத்து ஏமாற்றும் இது போன்ற நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
