CRIME
பாகல்பூர்: பள்ளி முடிந்து வந்த சிறுமி…! கதவைத் திறந்ததும் அதிர்ச்சி..! அறையில் காயங்களுடன் கிடந்த தாய்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மதுசூதன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கணேசிபாக் பகுதியில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி நீது தேவி, தனது 6 வயது மகள் பள்ளியிலிருந்து வருவதற்காக வீட்டில் தனியாகக் காத்திருந்துள்ளார். அப்போது திடீரென முகமூடி அணிந்த 4 முதல் 5 ஆயுதமேந்திய கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். இதனை நீது தேவி தடுக்க முயன்றபோது, கொள்ளையர்கள் துப்பாக்கியின் பின்பகுதியால் அவரது தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
கொள்ளைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே, ராணுவ வீரரின் 6 வயது மகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். கதவைத் திறந்தவுடன் சிறுமியைப் பிடித்து உள்ளே இழுத்த கொள்ளையர்கள், அவளது கழுத்தில் துப்பாக்கியை வைத்து சத்தம் போடக் கூடாது என்று மிரட்டி பிணைக் கைதியாகப் பிடித்தனர். காயமடைந்த தாய் மற்றும் சிறுமியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருந்த கொள்ளையர்கள், சுமார் அரை மணி நேரம் வீட்டைச் சோதனையிட்டனர். பீரோவில் இருந்த 60,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளைச் சூறையாடிக்கொண்டு தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாநகரக் காவல் கண்காணிப்பாளர் அத்துலேஷ் ஜா தலைமையில் மதுசூதன்பூர் போலீசாரும், தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த நீது தேவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தடய அறிவியல் குழுவினர் கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர். பகல் நேரத்தில் ராணுவ வீரர் வீட்டில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
