DISTRICT NEWS
சேலம் மத்திய சிறையில் பயங்கரம்.. கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை.. வழக்கறிஞரின் அதிரடிப் புகார்..!!
சேலம் மத்திய சிறையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சாதிய பாகுபாடுகள் நடப்பதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கைதிகள் ஆடைகளின்றி வெறும் உள்ளாடைகளுடன் அடைக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கேரளா மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 7 கைதிகள் கடுமையான முறையில் குறிவைக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், சிறையின் ஜெயிலர் சிவானந்தன் தலைமையிலான தனிப்படையும், வார்டன்கள் சுப்பிரமணி, லோகநாதன், தனபால், விநாயகம், வீரகுரு ஆகியோரும்தான் இந்த மனித உரிமை மீறல்களுக்குக் காரணம் எனப் பெயர்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். கைதிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் கூட அவர்கள் மீது நீதிமன்றம் மூலமாகவே நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறதே தவிர, கைதிகளைத் தாக்கும் அதிகாரம் சிறைக்காவலர்களுக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போன் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதைத் தட்டிக்கேட்டதே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என்று விளக்கியுள்ள வழக்கறிஞர், கடுமையான சோதனைகளையும் தாண்டி 90% கஞ்சாவை சிறைக்காவலர்களே உள்ளே கொண்டு சென்று கைதிகளுக்கு விற்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதனை வாங்க மறுத்த நல்ஒழுக்கக் கைதிகளைத் தண்டிக்கும் நோக்கில், தரையில் தண்ணீர் ஊற்றி, தூங்கவிடாமல் நின்றுகொண்டே இருக்கும்படி அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும், ஏழைக் கைதிகளுக்குச் சரியான உணவு வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவதாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளார். மேலும், கைதிகளைச் சந்திக்க வரும் வழக்கறிஞர்களைச் சட்டம் அனுமதித்த போதிலும், சிறை நிர்வாகம் இறுதி நிமிடங்களில் அனுமதி வழங்கி ஐந்து நிமிடங்களில் மிரட்டி வெளியேற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இக்கொடூரம் தொடர்பாகச் சேலம் குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதியிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
