LATEST NEWS
அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் பிஸி.. அந்த கேப்பில் ஆந்திரா தட்டித்தூக்கிய ரூ.1,720 கோடி மெகா ப்ராஜெக்ட்.. வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..!!
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தனது முதன்மைப் பொறுப்பான புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பள்ளிக் கல்வித் துறையின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அண்மையில் சிவகாசி திருத்தங்கல் அரசுப் பள்ளியில் அவர் நடத்திய ஆய்வும், அங்குள்ள மாணவிகளின் ஆங்கிலப் புலமை மற்றும் கணினிகளின் பராமரிப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இத்தகைய நிர்வாகக் குளறுபடிகள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சிவப்பு நாடா முறைகள் காரணமாக, தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துடன் கையெழுத்திடப்பட்ட தென் கொரியாவின் ‘ஹ்வாஸுங் என்டர்பிரைஸ்’ நிறுவனத்தின் ரூ.720 கோடி மதிப்பிலான மெகா காலணி தயாரிப்புத் திட்டம் தமிழகத்தை விட்டு முற்றிலும் கைநழுவிப் போயுள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய இந்த பிரம்மாண்ட கொரிய முதலீட்டை, ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு சாதுரியமாகத் தனது மாநிலத்திற்கு ஈர்த்துள்ளார். அங்குள்ள குப்பம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 17,000 ஆந்திர இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. “தொழில் தொடங்கத் தமிழகத்தை விட ஆந்திராவே சிறந்த மாநிலம்” என அந்த நிறுவனம் அறிவித்து வெளியேறியிருப்பது தமிழகத் தொழில் துறைக்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், தமிழக அரசின் முதலீட்டு விளம்பரங்கள் வெறும் முகமூடி என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் கமிஷன் கலாச்சாரம் காரணமாகவே சர்வதேச நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குத் தப்பியோடி தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருகின்றன என்றும் சாடியுள்ளனர்.
