LATEST NEWS
இந்தியா போறீங்களா..? அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க… வைரலாகும் வெளிநாட்டுப் பெண்ணின் எச்சரிக்கை..!!
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கால்ரா என்ற பெண், முதன்முறையாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பகிர்ந்துள்ள 8 முக்கிய அறிவுரைகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரத்தை ரசிக்க வரும் வெளிநாட்டினர், இங்கு வந்து அசௌகரியங்களைச் சந்திக்காமல் இருக்கச் செய்யக் கூடாத தவறுகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வழங்கியுள்ள முக்கிய ஆலோசனைகளில், இந்தியாவில் ஒருபோதும் நேரடியாகக் குழாய் நீரை குடிக்கக் கூடாது என்றும், பாட்டிலில் அடைக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல, ஆரம்பத்திலேயே அதிக காரமான தெருவோர உணவுகளை உண்பதைத் தவிர்த்து, எப்போதும் சுத்தமாகவும் கூட்டமில்லாமலும் இருக்கும் பிரபலமான கடைகளையே தேர்ந்தெடுங்கள். மேலும், பயணங்களின் போது ஏமாறாமல் இருக்க மீட்டர் இல்லாத டாக்ஸிகளைத் தவிர்த்து ஓலா, உபர் போன்ற செயலிகளைப் பயன்படுத்துமாறும், அதிகளவு ரொக்கப் பணத்தைக் கையில் எடுத்துச் செல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DbSi7jbAF_q/?utm_source=ig_web_button_share_sheet
வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் நாட்டின் பண்பாட்டிற்கு மதிப்பளித்து அளவுக்கு அதிகமான சிறிய ஆடைகளைத் தவிர்த்துப் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது காலணிகளைக் கழற்றுதல், தலைமுடி மூடுதல் போன்ற உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இறுதியாக, இந்தியாவில் வாகனப் போக்குவரத்து வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்பதால், ஒருவழிப் பாதைகளிலும் இருபுறமும் பார்த்து எச்சரிக்கையுடன் சாலையைக் கடக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
