LATEST NEWS
அதிகாரிகளை வச்சிக்கிட்டு ஆட்சி நடத்தப்போறீங்களா..? இல்ல கம்யூனிஸ்டுகளை வச்சி ஆட்சிய தொடரப்போறீங்களா..? முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் எச்சரிக்கை..!!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் விவரங்களையும் பெயர்பட்டியலையும் சேகரிக்க வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்ட விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் , தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நேரடியாகக் கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இடதுசாரிகளின் வெளி ஆதரவோடுதான் தமிழக வெற்றிக் கழக அரசு நீடிக்கிறது என்பதை நினைவூட்டிய அவர், “அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?” என்று மிகக் காட்டமாக வினவியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு தரப்பு மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறை மிகவும் மோசமாக இருப்பதாக சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கம்யூனிஸ்டுகள் குறித்து தன்னிச்சையாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட வட்டாட்சியர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியேற்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது முறையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தவெக அரசுக்கு வழிகாட்டும் தற்போதைய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் செயல்பாடுகள் சட்டவிரோதமாக உள்ளதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முழுப் பொறுப்பும் முதலமைச்சர் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
