CRIME
“ஐயோ கடவுளே..” 2 மணிக்கு வெடித்த தீ.. 3 குழந்தைகள் உடல் கருகிய கொடூரம்…அரசு மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று பிறந்த குழந்தைகள் படுகாயமடைந்த சூழலில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், சிந்த்வாரா மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைச் சீராக வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ‘வார்மர்’ இயந்திரத்தின் வெப்பமூட்டும் பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. இதனால் அந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று பிஞ்சுக் குழந்தைகளும் தீயின் நாக்குகளில் சிக்கி உடல் கருகிப் போயின. அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனே குழந்தைகளை மீட்டுப் முதலுதவி அளித்தபோதும், நிலைமை மோசமடைந்ததால் அவர்கள் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரிக்குத் தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
ஜபல்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அங்குள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிந்த்வாரா மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைக்கான குழந்தைகள் நல மருத்துவர் இல்லாத காரணத்தினாலேயே, பல மணி நேரம் தாமதமாகக் குழந்தைகள் ஜபல்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து சிந்த்வாரா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் கஞ்சன் துபே கூறுகையில், இயந்திரத்தின் பழுதடைந்த தொழில்நுட்பக் கோளாறுதான் முதற்கட்டக் காரணமாகத் தெரிகிறது என்றும், இந்தச் சம்பவத்தில் யாருடைய அலட்சியமாவது இருக்கிறதா என்பது குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
