CRIME
“டிசைன் பிடிக்கல”.. சினிமா பாணியில் 4 மாதமாக போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. நகைக்கடைக்காரரையே அலறவிட்ட பெண்.. சென்னையில் நடந்த பகீர் திருட்டு..!!
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும் அன்குஷ் என்பவரின் கடைக்கு, கடந்த நான்கு மாதங்களாக ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வாடிக்கையாளர் போலத் தினமும் வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் பல்வேறு நகைகளை ஆர்வமாகப் பார்ப்பதும், பின் பிடிக்கவில்லை எனக் கூறிச் செல்வதுமாக இருந்துள்ளார். சமீபத்தில் கடையில் இருந்த நகைகளைக் கணக்கெடுத்தபோது 85 சவரன் நகைகள் மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். அதில், அந்தப் பெண் நகைகளைத் தனது ஆடைக்குள் மறைத்துத் திருடிச் செல்வதும், வெளியே நின்ற காரில் ஏறித் தப்பிப்பதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் எண்ணை வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது மீஞ்சூரைச் சேர்ந்த ரிகானா என்பது தெரியவந்ததை அடுத்து, அவரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யார், மீதமுள்ள நகைகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளன மற்றும் இதே பாணியில் வேறு எங்காவது அவர் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
