LATEST NEWS
“கதறும் தவெக பெண்!” – முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்ற விஜய் ஆண்டனி… சோசியல் மீடியாவில் பரபரப்பு…!!
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் கொண்டுவந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால், இத்திட்டத்தின் மூலம் தங்களுக்கு உரிய உதவி கிடைக்கவில்லை என சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில் பேசியுள்ள சசி என்ற பெண், தானும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் தான் என்றும், சேலத்தில் தனது தாயாருடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது மகளின் கணவர் தன்னை மிகக் கடுமையாக, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகவும், இதுகுறித்து ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையைத் தொடர்பு கொண்டு வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பெண்ணே நேரில் வர வேண்டும் எனக்கூறி, போலீசார் இதுவரை தங்கள் வீட்டிற்கு வந்து கூட விசாரணை நடத்தவில்லை என அவர் அழுதுகொண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலமைச்சர் விஜய் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில், இந்த வீடியோவை அவர் பார்க்கும் வரை அனைவரும் பகிருமாறு அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி இந்த வீடியோவை பகிர்ந்ததையடுத்து, இணையத்தில் இது வேகமாகப் பரவி வருகிறது. தவெக தொண்டர்கள் பலரும் அப்பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அவசர உதவிக்கு அழைத்த பிறகும் காவல் துறையினர் நேரில் சென்று ஒரு ஆரம்பக்கட்ட விசாரணை கூட நடத்தாதது ஏன் எனப் பலரும் இணையத்தில் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
