LATEST NEWS
வீடு இல்ல.. அது ஒரு கிராமம்..! 83 பேருடன் வாழும் பிரம்மாண்ட கூட்டுக்குடும்பம்… வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!
நவீன காலத்தில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பாவின் குடும்பம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. இவரது குடும்பத்தில் மொத்தம் ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த 83 உறுப்பினர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு பெரிய குடும்பம் என்பதால் இடப்பற்றாக்குறை காரணமாக அடுத்தடுத்து அமைந்துள்ள நான்கு வீடுகளில் இவர்கள் வசித்து வந்தாலும், இவர்களின் வாழ்க்கை முறை என்னவோ ஒரே குடும்பமாகவே பின்னிப்பிணைந்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான குடும்பத்தின் அன்றாட செயல்பாடுகள் மிகவும் திட்டமிட்ட முறையிலும், நேர்த்தியாகவும் நடைபெறுகின்றன. 83 பேருக்கும் சேர்த்து தினமும் ஒரே சமையலறையில் தான் உணவுகள் சமைக்கப்படுகின்றன. குடும்பத்தில் உள்ள மருமகள்கள் அனைவரும் வயதின் அடிப்படையில் தங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, ஒற்றுமையுடன் சமையல் பணிகளைக் கவனித்துக்கொள்கின்றனர். அதேபோல், அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் குடும்பத்தை நல்வழியில் வழிநடத்த, குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்த பொறுப்புகளைத் தங்களின் தோள்களில் சுமக்கின்றனர்.
பொருளாதார ரீதியாகவும் இந்த குடும்பம் ஒரு வியக்கத்தக்க கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவர்களுக்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், நான்கு பேருந்துகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஈட்டப்படும் அனைத்து வருமானமும் தனிநபர்களிடம் செல்லாமல், குடும்பத்தின் ஒரே பொதுக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படுகிறது. சுயநலம் மிகுந்த இன்றைய காலகட்டத்தில், விட்டுக்கொடுத்தலும், புரிதலும் நிறைந்த இவர்களது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
