LATEST NEWS
அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவியது ஏன்? அடுத்தடுத்து உண்மைகளை உடைக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… பரபரப்பில் அரசியல் களம்…!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சிக்குத் தாவும் படலம் தீவிரமடைந்துள்ளது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தொடங்கி, பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். இந்தத் தொடர் கட்சித் தாவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள திமுக மற்றும் அதிமுக தலைமைகள், தவெக வெளிப்படையாகவே எம்.எல்.ஏக்களை இழுத்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி ஆளுநரிடமும் முறையிட்டுள்ளன. இந்தச் சூழலில், சமீபத்தில் பேட்டியளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுக தலைமையின் மீதான அதிருப்தி காரணமாகவே தாங்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், அந்த வேளையில் தவெக தரப்பிலிருந்து வந்த அழைப்பையேற்று அக்கட்சியில் இணைந்ததாகவும் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு, தவெகவின் குதிரை பேர குற்றச்சாட்டுக்கு நேரடி சாட்சியாக அமைந்துவிட்டதாகக் கருதிய திமுக, தவெக அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிரடியாகப் புகாரளிக்கத் திட்டமிட்டது.
தனது முந்தைய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்ததை உணர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது பேச்சிற்குப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இன்று காலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பேச்சின் உண்மையான அர்த்தம் ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆளுங்கட்சியான தவெக தரப்பிலிருந்து தங்களுக்கு எவ்வித நிர்ப்பந்தமும் அல்லது அழுத்தமும் தரப்படவில்லை என்றும், எவ்வித பேரம் பேசுதலுக்கும் இடமில்லாமல் தாங்கள் அனைவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்தோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
