LATEST NEWS
“விஜய் கூப்பிட்டு நான் போகல…” அதிமுக தலைமை மீதான அதிருப்தியே காரணம்… உண்மையை உடைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!!
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவினர் தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, தவெக கட்சி நிர்வாகிகளை ‘குதிரைப்பேரம்’ மூலம் தங்களது கட்சியில் இணைத்து வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரிடம் சென்னை லோக்பவனில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
திமுகவின் இந்த புகாரைத் தொடர்ந்து, தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து வெளியான தகவல்கள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். மகாபலிபுரத்தில் தவெக-வில் இணைந்தபோது தான் அளித்த பேட்டி தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், தமிழக வெற்றி கழகத்தில் இருந்து யாரும் தங்களை நேரடியாக அழைத்து கட்சியில் இணையுமாறு வற்புறுத்தவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் குழுக்களாக தவெக-வில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கரூரில் தவெக-வில் இணையுமாறு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், சுமார் 11 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பத்திற்கு இணங்கவே முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்ததாகத் தெரிவித்து, குதிரைப்பேரப் புகாருக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
